ஞாயிறு, 11 டிசம்பர், 2016

காண்கிறது எப்போவம்மா ?!






கருணையுள்ளத்துக்கு எந்தாயி
கட்டழகி சொல்லுக்குக்
கரடிபுலி யத்தனையும்
கால் மடக்கித் தெண்டனிடும் !!
இப்போ..
கருணை யழகடங்க எந்தாயி
கட்டழகி சொல்லடங்கக்
கரடிபுலி யத்தனைக்கும்
கவலையத்த நித்திரையாம் !!

வீணையழகுக்கு எந்தாயி
வித்தாரக் குரலுக்கு
வேங்கம்புலி யத்தனையும்
விரல் மடக்கித் தெண்டனிடும் !!
இப்போ..
வீணை யொலியடங்க எந்தாயி
வித்தாரக் குரலடங்க
வேங்கம்புலி யத்தனைக்கும்
விசனமத்த நித்திரையாம் !!

தெய்வமழகுக்கு எந்தாயி
தேவதையாள் வாக்குக்கு
திருடவந்த கூட்டமெல்லாம்
தேரடியேத் தெண்டனிடும் !!
இப்போ..
தெய்வ மழகடங்க எந்தாயி
தேவதையாள் வாக்கடங்க
திருடவந்த கூட்டத்துக்கு
தேசமெல்லாம் பொம்பொதயல்  !!

மலையப் பொடிநுணுக்கி   எந்தாயி
மருமலைய வில்வளைப்பா!!
மாடுமக்க ளெல்லாரும் நாங்க
மகிந்துதா ங்கெடந்தமம்மா !!
இப்போ..
மலையும் இரும்பாச்சு
மருமலையும் வீணாச்சு!! எந்தாயி
மாதா திருமுகத்த
மதியுடையாள் தன்னழக
மாடுமக்க ளெல்லாரும் நாங்க
மகிந்துபோயிக் காண்பதெப்போ?!

கல்லைப் பொடிநுணுக்கி  எந்தாயி
கருமலைய வில்வளைப்பா!!
காப்பாத்த ஆளிருக்க நாங்க
கவலையத்து இருந்தமம்மா !!
இப்போ..
கல்லும் மலையாச்சு
கருமலையும் வீணாச்சு!! எந்தாயி
கட்டழகி  திருமுகத்த
காரழகி  தன்னழக  நாங்க
காண்கிறது எப்போவம்மா ?!



வியாழன், 24 நவம்பர், 2016

IT துறையும், இரவல் காதலியும்...




கடும் பணிச்சுமை காரணமாக கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னமே வாசித்துவிட்ட ‘செல்லமுத்து குப்புசாமி’ யின் "குருத்தோலை" நாவலைப் பற்றி எழுத முடியாமல் போய்விட்டது. அதைப்பற்றி எழுத எனக்கு நிறைய இருக்கிறது. விரைவில் எழுதுவேன். பெரும்பாலும் எனக்குக் கிடைக்கும் தொடரூர்திப் பயணங்களின் போதுதான் வாசிக்க ஏலுகிறது. ஆகவேக் கடந்த வாரத்தில் தொடங்கி நாளொன்றுக்குச் சராசரியாகக் (காலை-மாலை) கிடைத்த முப்பது நிமிடங்களில் வாசித்து இன்று முடித்த "இரவல் காதலி" பற்றிச் சிலவரிகள். இதை வாசித்து முடித்தத் தருணத்தில் உண்மையிலேயே எனக்கும் என் வாழ்வியலுக்கும் சற்றும் தொடர்பற்ற ஒருப் புதுவுலகத்துக்குள் போய் வந்ததைப்போல உணர்ந்தேன். வேதியியல் ஆராய்ச்சியுலகமே மிகக் கொடியது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, IT துறையையும், அதில் இருக்கும் மனிதர்களின் நடை, உடை, பாவனைகளை, என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பில் வேதியியல் படித்தவர்கள் இன்று IT துறையில் என்னை மிஞ்சி வாங்கும் ஊதியங்களை, அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களை, அவர்களுக்கு இந்தச் சமூகம் கொடுக்கும் உயர்தனி மதிப்புகளையெல்லாம் பார்த்து என்னுள் ஓடியப் பொறாமை எண்ணங்களை இங்கேச் சொன்னால் பெரும்பாலான IT துறை நட்புகள் என்னை நட்பிலிருந்துக் கழட்டி விட்டுவிடுவார்கள். ஆகவே நாவலைப்பற்றி மட்டும் பேசுகிறேன். இந்த நாவலை வாசித்தபிறகு என்னுள் இருந்த அந்தப் பழைய எண்ணங்கள் யாவும் காணாமல் போயின என்றால் அது மிகையில்லை.
குருத்தோலை நாவலில் IT துறை வேலைக்காக பெங்களூர் போகும் "ராசு" தான் இந்த நாவலில் நாயகன் "அசோக்". அசோக் என்னும் பாத்திரம் உண்மையில் செல்லமுத்து குப்புசாமியாக ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்வி நாவலை வாசித்து முடிக்கும்வரை என்னுள் தோன்றிக்கொண்டே இருந்தது. நாவலில் IT துறைக்கு ஆள் தேர்வு செய்யும் வழிமுறைகள் முதலாக, Programming, Coding, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பல்வேறு படிநிலைகள், ஒவ்வொரு நிலையிலும் பணிபுரியும் பல்வேறுபட்ட மனிதர்களின் செயல்பாடுகள், அரசியல், ON-SITE, CLIENTS, அவர்களைச் சமாளிக்கும் முறைகள், இதன் பின்னே இயங்கும் பெரும் பொருளியல் வரை பொருளுலகத்துக்குள்ள அத்தனைப் பிரமாண்டங்களையும் மிக எளிதாக அதே நேரத்தில் என்னைப்போன்ற வாழைமட்டைக்குக்கூட புரியும் விதத்தில் வரிகளில் அடக்குவதென்பது தலைசிறந்தப் பொருளாதார வல்லுநரும், எழுத்தாளருமான செல்லமுத்து குப்புசாமி யால் மட்டுமே சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். நான் மேற்சொன்னவைகள் எல்லாமே புறத்திணை தொடர்பானவை.
இன்னும் நான் அகத்திணைப் பற்றிச்சொல்லவில்லை. நாவலின் உயிரோட்டமே அகம்தான்.... அல், பகல், உணவு, மனைவி, குழந்தை, வீடு, தந்தை, தாய், மருந்து, இயற்கை என்று எல்லாம் இருந்தும் தவிர்த்துவிட்டு உழைக்கும் IT துறையினரின் வாழ்வியலை, எந்தவொருப் பிடிப்புமின்றி வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் எண்ணற்றத் திருமணமாகாத முதிரிளைஞர்களை, அவர்களின் அன்றாட வாழ்வியலை, காமத்தை, குடிப்பழக்கத்தை, திருமணம் வரை உடனிருந்த நண்பர்கள் மணமாகியபின் ஒவ்வொருவராக நீங்கும் போது ஏற்படும் நிரப்பவொண்ணா வெறுமையை என்று இந்த நாவல் பேசாப்பொருளேதும் இல்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் இலக்கியத்தில் மட்டுமே வல்லுநராக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொங்குப்புற வாழ்வியல், உலகம் முதல் உள்ளூர் பொருளியல், எங்களைப் போன்றவர்களுக்கு “அப்புறத்து உலகமான” IT துறை பற்றிய அறிவு என்று பன்முகத்திறம் கொண்ட எழுத்தாளர் இவராகத்தான் இருக்கமுடியுமென்று எண்ணுகிறேன்.
இடையிடையேக் குடும்பத்தை, மனைவியை நேசிக்கச் சொல்லும்போது நம் வீட்டுப் பெரியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். நானிருக்கும் ஆராய்ச்சித்துறையில் ஆங்காங்கு நடக்கும் வக்கிரக் காமங்களை மட்டுமேக் கேள்விப்பட்டபோதும், கண்ணாறக் கண்டபோதும், அந்தக் களியாட்டங்களில் ஈடுபடுவோர் செய்யும் நீச அரசியலில் சிக்கி வழியறியாமல் தவிப்பவர்களைச் சந்தித்தபோதும் இங்கே சொல்லமுடியாத அருவருப்புணர்வு என்னுள் உண்டாகியிருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் வரும் "அசோக்-காயத்ரியின்" காமம் மேலிட்டப் பொருந்தாக் காதலை, கொஞ்சுதல்களை வாசித்தபோது ஒருவித கழிவிரக்கம் தான் அவர்கள் இருவர் மேலும் தோன்றியது. உண்மையிலேயே எத்தனை “ரஞ்சித்” கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகப் பாடுபடப் போய் குடும்பத்தை இழந்திருக்கிறார்களோ? எல்லோர் வாழ்விலும் “சுச்சீ”க்கள் கிடைப்பது அரிது... சுச்சீ வாழ்க!! தான் மேலோங்க அல்லது நிலைக்க வேண்டுமானால் எந்த எல்லைக்கும் தயக்கமின்றிப் போய் வாலாட்டும் அரிப்பெடுத்த ஸ்வப்னாக்கள் எல்லாத் துறைகளிலும் திரிவார்கள் போலிருக்கிறது. என் வாழ்விலும் ஒரு ஸ்வப்னா இருந்திருக்கிறாள். என் ஆராய்ச்சி நட்புகள் மட்டும் புரிந்துக்கொள்வார்கள்.
ஒருப் பன்னாட்டு நிறுவனத்தை நிறுவ எவர்க்கேனும் ஆசையிருந்தால் நிச்சயம் இந்த நாவலை வாசித்துவிடுங்கள்... பொருளியல் கோட்பாடுகள் முதல், இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து பார்ப்பது வரை புகுந்து விளையாடியிருக்கிறார். நிச்சயம் மென்பொருள் துறை நண்பர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்...உங்களுடைய வாழ்க்கையை அசைபோட வைக்கும் எண்ணற்ற நிகழ்வுகள் "இரவல் காதலி" நாவல் முழுதும் நிறைந்துக் கிடக்கின்றன... வாங்கி வாசிக்கப் (மின் புத்தகமாகவும் கிடைக்கிறது) பரிந்துரைக்கிறேன்!! எங்களின் வாழ்வியலான "குருத்தோலை" நாவல் பற்றி விரைவில் எழுதுகிறேன்...

-செ. அன்புச்செல்வன்
25-11-2016

வெள்ளி, 14 அக்டோபர், 2016

புரட்டாசிக் கடைசிக்கிழமையும் கொங்குநாடும்!!

அண்மை நாட்களில் ஊரிலிருந்து என்னுடன் அலைபேசும் உறவுகள், நட்புகள் எல்லோரும் நீங்க புரட்டாசி விரதமில்லையா? சனிக்கிழமை கும்பிடலையா என்றுக் கேட்கிறார்கள்.  என் கல்லூரிக் காலம் வரையில் நம் ஊர்ப்புறங்களில் மாதம் தோறும் ஏதாவதொருக் கொண்டாட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மக்களின் எண்ணமெல்லாம் அடுத்தடுத்த நோம்புகளை, அவற்றை எதிர்கொள்கின்ற முறைகள், அதற்கான செலவினங்கள் யார் யாரை நோம்புக்கு அழைக்கலாம், யாரை அழைக்காமல் விட்டுவிடுவது என்பதுப் பற்றியேதான் இருந்துக்கொண்டு இருக்கும். சித்திரை ஒன்றாம்நாளான சித்திரைக்கனியன்றே பொள்ளாச்சி-உடுமலைப் பக்கமுள்ள ஆற்றோர அல்லது நீர்நிலைகள் இருக்கும் கோவில்களுக்கு ஊரேத் திரண்டுச்சென்றுத் தீர்த்தம் எடுத்துவந்து தம் உள்ளூர் தெய்வங்களை முழுக்காட்டி மழைவரம் கேட்பதிலிருந்துக் கொண்டாட்டங்கள் தொடங்கும். சித்திரையின் பின்னேழு நாட்களும், வைகாசியின் முன்னேழு நாட்களும் கழிவு நாட்களாக (அக்கினி வெயில்) வரையறுக்கப்பட்டு தொலைவிலிருக்கும் மலைக்கோவில்களுக்குத் தீர்த்தக் காவடிகள் கொண்டுசெல்வது மரபாகையால் பழனியில் இந்தக் கழிவுநாட்களில் சிறப்புப் பூசனைகளும், தங்கத்தேரும் நடந்தேறும்.

   சித்திரை மாத நிறைவில் பழனிக்குக் காவடி எடுக்கவென்றுக் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் பச்சைத் துணியுடுத்தி, வெறுந்தரையில் படுத்துறங்கி விரதமிருந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து வரும் ஆவணி மாதத்தின் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமூர்த்திமலைத் தெய்வமானக் கஞ்சிமலையானை நினைத்து விரதமிருந்து, அதிகாலைப் பூசைக்குப் பாலும், அங்கிருக்கும் ஏழைகளுக்கு ஆக்கிப்போட ஏதாவதொரு ஞாயிறில் அரிசியும்-பருப்பும் இன்னபிற பொருட்களும் கொடுத்து விரதம் முடிப்பார்கள் எம்மக்கள். பின்னர் புரட்டாசி வந்துவிடும். கொங்குநாட்டின் தென்மேற்குப் பகுதியான  உடுமலை-பொள்ளாச்சிப் பகுதிகளை இரெட்டியார்கள், நாயக்கர்கள்  பாளையங்களாகக் கோட்டைக் கொத்தளங்களோடு ஆண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் எங்கள் ஊர் அண்மையிலிருக்கும் குன்றுகள் தோறும் அழகுதிருமலைராயன் என்றத் திருநாமம் பெற்றப் பெருமாள்கோவில்களை நிறைய உருவாக்கியிருக்கிறார்கள்.  








   புரட்டாசியின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மலைமீது இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றுவந்து ஒருசந்தி முடிப்பது இங்குள்ள பெரும்பாலானவர்களின் வழக்கம். மலைக்கோவில்களில் அன்னதானம் ஒவ்வொருச் சனிக்கிழமையிலும் பெருமாள் திருமேனிகள் கோவிலை வலம்வர மேலேக் கருடனும் வலம்வருவதைக் நிறையமுறைகள் கண்டிருக்கிறேன். கழுத்திலே வெண்குறியோடுக் கோவிலின் கூட்டத்தைக் கீழ் நோக்கியவாறு வானிலே வட்டமிடும் கருடப்பறவையை நான் கண்ணாறக் கண்டுக் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாகியிருக்கும் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் கருடன் மட்டுமல்ல, கூட்டம் கூட்டமாகப் பறந்தக் கொக்குகளை, மேய்கின்ற மாடுகளின் உடலில் ஒட்டியிருக்கும் உண்ணிகளைப் பொறுக்கிக் கொத்தியுண்ணும் நாரைகளை, கல்வாழை இலையில் ஆத்தா வைக்கும் பாசிப்பருப்புச் சோற்றுக்காகக் கூரை எரவாரத்தில், தென்னஞ்சோகையில் வரிசைபோட்டு அமர்ந்திருக்கும்  காகங்களை, சமையல் பாத்திரங்களைச் சாம்பல்போட்டுத்  துலக்குவதற்கு முன்னம் மீதமாகியக் காய்கறிகளை, மிளகாய்த் தோலிகளை, ஆங்காங்கு மிஞ்சியிருக்கும் சோற்றுப்பருக்கைகளைத் தேடிக்கொண்டு அம்மாவிற்கு முன்னால் மரத்தடிச் சலதாரிக்கு வந்து நிற்கும் நாகணவாய்புள் எனப்படும் அழுக்குவண்ணாக் குருவிகளை (மைனா), வளர்ந்து நிற்கும் சோளத்தட்டில் கூடுகட்டியிருக்கும் தேன்சிட்டுகளை, பூலாம்புதர்களில் தத்தித்தத்தி ஓடும் செம்பூத்துகளை, மழைநின்ற இரவில் “எடைக்கெடை முக்காத்துட்டு” என்றுத் திரும்பத்திரும்ப வியாபாரம் பேசுவதுபோலச் சேற்றுவளைகளுக்குள்  சத்தமிட்டேச்சலிக்கும்  செட்டியார் தவளைகளை, என்று இளவயதில் நான்கண்டப் பெரும்பாலனவைகளில் இன்றைக்குக் கண்களுக்கேத் தட்டுப்படுவதில்லை. பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் சனிக்கிழமை விரதம் ஒரு முக்கியமான நோன்பாகவே இருந்தது.   பெருமாள் திருவடியிலிருந்துப் பெற்றுவந்திருந்தத் திருத்துழாய் இலைகளோடு இருக்கும் நீரை அருந்திக்கொண்டேப் பொழுது வரைக்கும்,


"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியோனே  வேங்கடவா நின் கோயில்வாசல்-
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய் கிடத்துனது பவளவாய் காண்பேனே"


என்றுக் குலசேகரப் பாசுரம் பாடிக்கொண்டே விரதம் இருப்பார் ஆத்தா. புரட்டாசியின் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலையில் நிறைகுடத்து நீர் கொணர்ந்துப் புதிதாகச் சமைத்துக் காகத்துக்கு என எச்சில்படாதப் பிசைந்தச் சோற்றை கல்வாழை இலையில் வைத்து கல்திட்டின் மீது வைக்கும்போது மூன்றுமுறை நீர்விட்டுக் கழுவிவிடுவேன் நான். அதன்பிறகுதான் ஒருசந்தி முடிப்பார். அதுவரைக்கும் நாங்கள் பசியோடுதான் காத்திருப்போம். ஆனால் பச்சைக் கற்பூரமும், திருத்துழாயும் கலந்தத் தீர்த்தம் தான் அன்றைய நாளின் பசியை ஆற்றியிருக்கும். பசி பொறுத்தல் என்பது ஒரு தவம். பச்சைக்கற்பூரம் என்றதும் திருப்பதி பெருமாள் தொடர்பானக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.



 மோவாயில் திருநாமம் !! 

இராமானுசரின் சீடர் அனந்தாழ்வார். இவர் பிறந்தவூர் இப்போதையக் கர்நாடகாவில் இருக்கும் ஆதிரங்கத்துக்குப் பக்கத்தில் திருப்புத்தூர் என்னும் ஊர். தன் குருவான இராமனுசரின் மேல் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருந்தவர். ஒருமுறை இராமானுசருக்கு திருமலையிலேத் திருக்குளம் ஒன்றை வெட்டி நீர்நிலையாக உருவாக்கி, அதன்கரையில் நந்தவனம் அமைத்து அதில் கிடைக்கும் மலர்களைக்கொண்டே திருமலையானைப் பூசிக்கவேண்டுமென விரும்பினார். ஆகவேத் தம் மாணாக்கர்களை அழைத்துத் திருமலைக்குப் போகச்சொல்ல அனந்தாழ்வாரைத் தவிர யாருக்குமேப் போகவிரும்பவில்லை. இராமானுசருக்கோ அனந்தாழ்வாரை அனுப்ப விருப்பில்லை. காரணம் அனந்தாழ்வாருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. ஆயினும் விடாப்பிடியாக நான்தான் போவேன், துணைக்கு என் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டேப் போவேன் என்று அடம் செய்து, குருவின் ஒப்புதல் பெற்றுக் குடும்பத்தோடு வந்துப் பணியைத் துவக்கினார். ஐந்தாறு ஆண்டுகளாகின. திருக்குளமும் ஏறக்குறைய முடியும் தருவாய் ஆகிவிட்டது. அப்பொழுது அனந்தாழ்வாரின் மனைவி இன்னொருக் குழந்தையையும் சுமந்துகொண்டு இருந்தார்.


 வைதீக மரபினராக இருந்தாலும் வன்தொண்டர். தான் கடப்பாரையால் மண்ணைக்குத்தி, மண்வெட்டியில் வெட்டிக்கொடுக்க கருவைச் சுமக்கும் மனைவியும், குழந்தையும் கூடைகளில் மண்ணை வாங்கிக் கொண்டுசென்றுக் கொட்டினார்கள். அனந்தாழ்வாரின் தீராத இறையுணர்வும், குருபக்தியும்  இறையை இரங்கவைத்துவிட்டன. வந்தார் பெருமாள் ஒரு கலியாணமில்லாத வயோதிகன் போலத் தோற்றத்தில் வந்து கருவைச்சுமந்தப் பெண் கொண்டு வந்த மண் கூடைகளை ஓடியோடி வாங்கிக் கொணர்ந்துக் கரைகளில் சேர்த்தார். அந்தப்பெண் எவ்வளவு மறுத்தும் விடாப்பிடியாக மண்கூடைகளை வாங்கிக்கொள்ள, மண் வெட்டிக்கொடுக்கும் அனந்தாழ்வார் வேகவேகமாகத் திரும்பும் அதே சமயத்தில் தன்னிடம் ஏதோ சொல்லமுயன்று அச்சத்தால் சொல்லாமல் போவதையும் கண்டு இறும்பூது எய்தியவர் இறுதியாகக் கண்டுபிடித்துவிட்டார். 

கடுஞ்சினத்தின் உச்சியில், என் மனைவிக்கு உதவிசெய்ய நீ யாரடா? அதோடு என் பணியிடைப் புக உனக்கு என்ன உரிமை என்று தாறுமாறாக வாய்ச்சொல் வளர்ந்துக் கைவைத்துக் கொள்ளுமளவுக்குச் சண்டை வலுத்தது. இறுதியாக அனந்தாழ்வார் சொன்னார், நீயாக வந்தவழி போய்விட்டால் சரி..இல்லையென்றால் இதோ என் கையிலிருக்கும் கடப்பாரை பேசவேண்டிவரும் என்று எச்சரிக்க, வயோதிகன் சிரிக்க, இவர் கடப்பாரையில் ஓங்கி ஒன்றுப் போட, அது வயோதிகனின் வாயிற்குக் கீழே மோவாயில் பட்டுக் குருதிக் கொப்பளித்தது. வயோதிகன் சென்றுவிட்டான். அடுத்தநாள் காலையில் கோவில் திறக்கும்போது திருமலையானின் மோவாயிலிருந்து இரத்தம் கசிய, இவர் வந்தது பெருமாளென அறிந்து அழுக, நிறைவாக அங்கே இருந்தப் பச்சைக் கற்பூரத்தை எடுத்துக் காயத்துக்கு மருந்தாக இட்டார். ஆகவேதான் பெருமாளின் முகத்து மோவாயில் வெள்ளையாக இன்றும் பச்சைக் கற்பூரம் சாற்றுகிறார்கள். அனந்தாழ்வார் பயன்படுத்தியக் கடப்பாரை இன்றும் திருப்பதி திருமலைக் கோபுரத்தின் வடபுற மேல்பகுதியில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். திருப்பதி செல்பவர்கள் தவறாமல் கண்டுவாருங்கள்.      

  புரட்டாசியின் கடைசிக் கிழமை என்றுச் சொல்லப்படும் ஐந்தாம் சனிக்கிழமைக்கு என்றே வீடுகள் வெள்ளையடிக்கப்பட்டு, நீலம் கரைகட்டி, சாணமிட்டு வழித்துச் சுத்தம் செய்வார்கள். கடைசிக்கிழமையன்றுப் பெருமாள் கோவில் சென்று அங்கேப் பாசுரம் பாடியபடி நெய்ப்பந்தம் பிடித்துக் கொண்டிருக்கும் தாசர்கள், வீடுவீடாகச் சென்றுத் தாம் யாசகமாகப்பெற்ற அரிசியிலிருந்து ஒரு நாம்பல், காய்கறித் துண்டுகளை நாம் யாசகமாக அவர்களிடத்தே வாங்கி வீட்டிற்குக் கொணர்ந்து, வீட்டிலிருக்கும் அரிசியோடு சேர்த்து சோறாக்கி, குழம்பு வகைகள் செய்து தலைவாழையிலையில் பரிமாறி இறைக்குப் படைத்து, மாடுகளோடு நின்றிருக்கும் கண்ணன் படத்துக்கோ, திருப்பதிப் பெருமாள் படத்துக்கோ செவ்வந்தி மாலை, சந்தனம்-குங்குமம் துலங்கப் பூசைகள் செய்து வழிபட்டபிறகு, பரிமாறிய இலைகளிலிருந்து காகத்துக்கு என்று எடுத்துவைத்துவிட்டு, தெரிந்தவர் எல்லோரையும்  அழைத்து விருந்துக் கொடுத்து மகிழ்வார்கள் புரட்டாசிக்கிழமை நிறைவாகும். அந்த மாதம் முழுக்க ஊன் உண்ணாமல் இருப்பது ஒரு நிர்மலமான உணர்வைக் கொடுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.   


ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அண்ணாங்காலும், தளையலும்...


பொருள் அல்லது அறிவியல்வயிற் பிரிதலின் பொருட்டு உலகின் எங்கோவொரு மூலையில் இருந்துக்கொண்டிருந்தாலும், பிறந்தவூரை, பெற்றவர்களை, உற்றவர்களை, என்னை உடனிருந்துக் காத்தக் கால்நடைகளையும் நினைத்துக்கொண்டேதான் என் ஒவ்வொருப் பொழுதுகளும் நிறைவடைகின்றன. அப்பாவை நினைக்கின்றபோது அவருடையத் தலையை விட்டு அவர்தன் இறுதிநாள் வரை நீங்காதச் சுங்கம் வைத்துக் கட்டியிருக்கும் உருமாலையும், அதிகாலையில் என்னை எழுப்பிவிட்டுக் கீழ்வானில் தோன்றும் வெள்ளி விண்மீனைக் காட்டி, “இதுதான்  உழைக்கோல் மீன் !! இது கெழக்க கெளம்பி மேலவந்து மின்றதுக்கு மிந்தியே எந்திரிச்சுக் கட்டுத்தாரயில இருக்கறச் சாணி சப்பெல்லாம் வழிச்சு எறிஞ்சிட்டு, பண்டம் பாடீகளுக்குத் தீவனம் போட்டுரோணும்!!” என்னும் கடமை தவறாதே என்றென்னைக் கண்டிக்கும் சொற்கள் மட்டும் அப்பாவை நினைவூட்டுவதில்லை.






மாட்டுச்சாளையின் மேல் முகட்டில் அப்பா சொருகிவைத்திருக்கும் மாடு மிரட்டும் உழைக்கோல் தடியும், எரவாரத்தில் கட்டித் தொங்கிக்கொண்டிருக்கும் மேழிபூட்டியக் கலப்பை, நுகத்தடி, சாணி வழிப்பதற்காக மரத்தூணொன்றில் கவிழ்த்து வைத்திருக்கும் குறக்கூடை, சாணியள்ளியவுடன் கூட்டிச் சுத்தம் செய்யவென்று கட்டைதட்டிய விளக்குமாறு,  பால் கறவையின்போதுக்  கறவைகளின் பின்னங்கால்களில் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அணை-கயிறுகள், ஆட்டுக்குட்டிகள், எருமை மற்றும் மாட்டின் கன்றுகளைக் கட்டும்போது அவைகளின் கழுத்துக்கு, மேனிக்குப் புண்படாமல் மெலிதாக இருக்கவேண்டுமே என்பதற்காகக் கடைகளில் விற்கப்படும் நார்கயிறுகளை வாங்காமல் தையல்கடைக் கழிவுத்துணிகளை முன்னமேச் சொல்லிவைத்து வாங்கிவந்து நிலாவெளிச்சத்தில் வாசலில் கால்நீட்டி உட்கார்ந்துக்கொண்டுத் தன் தொடையின் மீது உருட்டித் திரித்தத் துணிக்கயிறுகள், கழுத்துத்தும்புகள், தும்புகளைக் கயிறுகளோடு பிணையப் பயன்படும் பித்தளைத் திருகாணிகள், இளங்கன்றுகளின், ஆட்டுக்குட்டிகளின் சிவந்துகிடக்கும் தொப்புள்கொடியைக் காகம் மற்றும் பருந்துகளின் பார்வையிலிருந்து மறைக்கவென்றுத் தைக்கப்பட்டுக் குட்டிகளின் தொப்புள்கொடியை மறைத்து நடுமுதுகுவரைக் கொண்டுசென்று முடிச்சிடும் வண்ணம் கச்சைகளோடுக் கூடியத் துணிப்பைகள், பாலூட்டும் கன்றுகள், பச்சைமேய்ந்துப் பழகும்முன்னம் கட்டுத்தாரை மண்ணைத் தின்றுவிட வாய்ப்பிருப்பதால், அவைகளுக்கு நார்க்கயிற்றில் பின்னப்பட்ட வாய்க்கூடைகள், என்று எல்லாவற்றையும்தான் நினைத்துக்கொள்வேன்.  



நான் ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் கண்ணாறக் கண்டு, மெய்யாறத் தழுவி, வாயாற மொழிய விரும்புவது எம் உறவுகளோடு மட்டுமல்ல. நாங்கள் வளர்க்கும் பண்டம் பாடிகள் எனப்படும் கால்நடைகளோடும், நாய்களோடும் தான். அவைகளும் எங்களின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர்தான். பண்டம் பாடிகளைப் பெரும்பாலும் காட்டுக்குள் கட்டித் தீவனமிட்டோ அல்லது மேய்த்தோக் கொண்டிருப்பார் அம்மா. அவைகளைக் காண்கின்றப் போதினில் ஏதோவொன்றை இழந்தவனைப்போல எனக்குள்ளே எண்ணிக்கொள்வதுண்டு. இந்த எண்ணம் அவைகளை நான் அருகிருந்துப் பார்த்துக்கொள்வதில்லை என்றக் குற்றவுணர்வால் ஏற்படுகிறது என்பதையும் உணர்வேன். அதனால் மாடுகளை, ஆடுகளை, கன்றுகளை, கிடாரிகளை, கிடாய்களை என்று எல்லாப் பண்டம் பாடிகளையும் ஒருமுறையாவது ஆசைத்தீர நீவிக்கொடுத்து என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்வதுண்டு.  


பண்டம்பாடிகளின் கழுத்துச் சப்பையினருகில் நீவிக்கொடுத்துக்கொண்டே, கொம்புகளுக்கு இடையே இருக்கும் குப்பைக்கூளத்தை நம் விரல்களால் கீறி நீக்கிவிட்டு, ஆங்காங்கு பறக்கும் தெனாசுகளைப் பிடித்துத் தலையைக்கிள்ளிக் கொன்றும், கால்நடைகளின் காதுமடல்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் கால்படி உதிரத்தை உறிஞ்சிஉண்டுப் படுத்திருக்கும் உண்ணிகளைத் தேடிப்பிடித்துப் பிடுங்கியெடுத்து மீண்டுவராதவாறு அருகில் இருக்கும் பாறைக்கல்லின் மீதோ அல்லது எரியும் தீயினுள்ளோ வீசிவிடுவதுண்டு. நம் தலைநீவலுக்கும், நம் நகக்கீறலுக்கும் சொக்கிப்போய் அவைகள் மேலும் நீவச்சொல்லித் தம் தலையை அருகே கொண்டுவந்துக்காட்டியும், நன்றியோடு நம்மை நாவால் நக்கியும் அன்பையும் திருப்பிக் கொடுக்கும் சமயத்துக்காகவே உழவன் தன் வாழ்நாளையேக் கொடுக்கிறானோ என்று எண்ணத்தோன்றும்.

ஊரில் இருக்கின்ற வெகுசில நாட்களில் காலை எழுந்தவுடன் என்னையறியாமல் கால்கள் மாடுகள் கட்டியிருந்தக் கட்டுத்தாரை நோக்கிப் போகும். முதலில் சாணியை அள்ளிக் குப்பைக்குழியில் வீசிவிட்டு, தென்னம்பூம்பாளைக் கொண்டு கழிசல் தீவனத்தட்டுகள், கால்நடைகளின் சிறுநீரில் நனைந்த வைக்கோல் சிதறல்கள்,   ஆட்டாம் புழுக்கை, இன்னபிறக் குப்பைக்கூளங்கள் என்று எல்லாவற்றையும் கூட்டியள்ளி,  கொழித்த வாய்க்கால் மணலோ, கிணற்றுமேட்டிலிருந்துச் சல்லிமண்ணோச் சாணம் சுமந்தக் குறக்கூடையில் கொண்டுவந்து கட்டுத்தாரையின் ஈரம் உலர்த்தக்கொட்டி நிரவிவிட்டுச் சுத்தம் நிறைந்த அந்த இடத்தைப் பார்க்கும்போது வரும் பாருங்கள் ஒரு செருக்கு.. அந்த அகமகிழ்வை இங்கே என்னால் சொற்களில் வடித்துவிடஏலாது. எத்தனை அவசரமான வேலைக்குக் காலையில் புறப்பட்டாலும், புறப்படும் முன்பேக் கட்டுத்தாரைச் சாணியை வழித்து எறிந்துவிட்டுச் சென்றால்தான் செல்லும் வேலைச் செம்மையாகும் என்று இங்கே எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு. நானும் அதை மனதார நம்புகிறேன்.

எனக்கு விவரம் தெரிந்த நாட்கள் முதல் எங்கள் தோட்டத்தில் குறைந்தது ஒரு எருமையாவது இருக்கும். பள்ளி முடிந்து வந்தப்பின்பு வரப்புகளில் அவைகளைக் கையில் பிடித்துக்கொண்டு மேய்க்கவேண்டும். இதுபோலக் கைகளில் பிடித்தபடி மாடுகளை மேய்ப்பது, எருமைகளை மேய்ப்பதைவிட சற்று எளிது. மாடுகள் சற்று மிரளக்கூடியவை. ஆகவே, அவைகள் வெள்ளாமைகளில் வாய்வைக்க எத்தனிக்கும்போது “ஹேஏய்...” ஒரு சின்ன மிரட்டல் சத்தம் போதும், உடனே ஒன்றுமேத் தெரியாத அப்பாவிபோல  வறப்பைநோக்கித் திரும்பிக்கொள்ளும். ஆனால் எருமைகள் அப்படியல்ல. பெரும்பாலும் பயிரை நோக்கியேக் கண்ணை வைத்துக்கொண்டு நாம் எப்போது ஏமாறுவோம் என்றுப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு வெடுக்கென ஆளுயரப் பயிரை அடியோடுப் பிடுங்கி மென்றுவிடும். அதற்குள் நாம் தெளிந்து இடி இடிப்பதைப்போல “ஹேஏய்.. யூக்காலி எருமயப் பாரு??!! பயிரக் கடிக்கோணும்னே வரப்புல மேயிதாட்ட..” கத்திவிட்டு மூக்கணாங்கயிறைப் பற்றி இழுத்தாலும் மிக மெதுவாகத் தம் கண்களை திருதிருவென நம்மைப் பார்த்துவிழித்தபடி வரப்பு நோக்கித் திரும்பும்.


எருமை மேய்த்தலில் ஒரு நன்மையும் உண்டு, அது அம்மாவின் தலைத் தெரியும்வரை வரப்பில் நடந்துக்கொண்டேயும், பயிர்களின் அடர்த்தியில் அம்மாவின் கண்களிலிருந்து மறையத்தொடங்கும்போது எருமையின் முதுகில் ஏறி உட்கார்ந்துச் சவாரிச் செய்துகொண்டே மேய்க்கலாம். எருமை மீது ஏறி இறங்கியதை அம்மா எளிதில் கண்டுபிடித்துவிடுவார். காரணம் எருமைத் தோலில் இருக்கும் செதில் போன்ற அழுக்கு நம் டவுசரின் பின்பக்கம் முழுதும் ஆகிவிடும். என்னதான் துடைத்துவிட்டு ஏறி உட்கார்ந்தாலும் கெரகம் டவுசர்ல கறையேன்னுப் புடிச்சுக்கும். எங்கள் வயதொத்தச் சிறுவர்கள், பள்ளிவிட்டு வந்தவுடன் கட்டாயம் பொழுதுசாயும் வரை வறப்புகளில் கைகளில் பிடித்துக்கொண்டு மாடுமேய்த்தே ஆகவேண்டும் என்பது எங்களின் குடும்பங்களில் எழுதாக்கிளவி. இ்தை நாங்கள் மீறியதுமில்லை. மீறத்துணிந்ததுமில்லை.
அதேசமயம் வாரஇறுதி நாட்கள் என்றால் கையில் பிடிப்பதை விடுத்துக் கோரைக்காடுகளில், வேலிகளில், பள்ளங்களில், குளத்து மேடுகளில், கரும்பு வெட்டிய கரைவழிகளில், கருக்கருவாள் கொண்டு நிலந்தொட்டு அறுத்த நெல்லங்காடுகளில், கூர்கூராகத் தலைநீட்டும் சோளக்கட்டைகள் காலில் ஏறிவிடாதவாறு வார்செருப்புப் போட்டுக்கொண்டுச் சோளக்காடுகளில், ஆனைக்கோரை மேவி நிற்கும் குளத்தங்கொரைகளில், ஊனாங்கொடி, வள்ளக்கொடி, நாணல், சேம்பு, தண்ணித்தழை, சிறுசுண்டை, கெழுச்சி, கரையாம்பூடு, பூலாம்பொதரு என்று பச்சைச் செழித்துக்கிடக்கும் ஆத்துமேடுகளில் பண்டம்-பாடிகளுக்கு "அண்ணாங்காலும்-தளையலும்" போட்டுவிட்டு அவற்றை மேய்ப்பதுண்டு.


அதென்ன அண்ணாங்கால்-தளையல்? “அண்ணாந்து” என்ற சொல்லுக்கு மேல்நோக்கி நிமிர்ந்துப் பார்த்தல் என்று பொருளுண்டு. ‘அண்ணா’ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றுத் தமிழ்வல்லார் செப்புவர். "நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணின் சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்" என்று அண்ணாந்து என்றச் சொல்லை “மிகுந்தச் செருக்கு” என்றப்பொருளில் நற்றிணை ஆளுகிறது. கொங்குவழக்காறுகளில்  “அண்ணாங்கால்” என்றச்சொல்லுக்குக் கால்நடைகளை அண்ணாந்துப் பார்க்கவியலாமல் கால்களோடுக் கழுத்தையும் சேர்த்துக்கட்டிவிடுதல் என்றுப்பொருள். அண்ணாங்கால் போட்டுவிடுதலால் கால்நடைகள் மேய்ந்து முடிக்கும்வரை மேல்நோக்கிப் பார்க்கவியலாது. அதோடு ஒருக்குறிப்பிட்ட எல்லைக்குள் மேய்க்கவேண்டியக் கட்டாயம் இருப்பதாலும், அருகே இருக்கும் வெள்ளாமைக் காடுகளுக்குப் பாதுகாப்புக்காகவும் இந்த அண்ணாங்கால் மாடுகளுக்குப் போடப்படுகிறது. பண்டம் பாடிகளின் அகவைக்கேற்ப கயிறுகள் உண்டு. பிறந்தகன்றுகளுக்குக் கழுத்துப் புண்படாதவாறு இரும்பு அல்லதுப் பித்தளைத் திருகிணியில் கோர்க்கப்பட்டப் பருத்திப் பஞ்சு அல்லது துணியால் திரிக்கப்பட்டத் தும்பும், இளங்காளை அல்லது கிடாரிகளுக்கு நூலால் திரிக்கப்பட்ட முகறைக்கயிறும், அதற்கும் மேற்பட்ட அகவையுடைய மாடுகள், காளைகள் மற்றும் எருதுகளுக்கு மூக்கணாங்கயிறும் உண்டு.

மாடுகளுக்குக் கொம்புகளைச் சுற்றிக்கட்ட நூலாலானத் தலைக்கயிறு, கழுத்தில் மணி அல்லது சலங்கை கோர்த்த கழுத்துக்கயிறு, எருமைகளுக்கு வலம்புரிச்சங்குகள் கோர்த்த மயிர்க்கயிறு, சவாரி வண்டிகளில் பூட்டப்படும் காளைகளுக்குக் குஞ்சம் வைத்தத் தலைக்கயிறு, கழுத்துக்கயிறு, கொம்புகளுக்குத் தங்கநிறத்தாலானப் பித்தளைப்பூண்கள்,  கால்களுக்குத் தண்டைகள் என்றுச்சூட்டப்பட்டு இட்டேரிகள், ஊர்வீதிகள் என்று வலம் வரும் கொங்குநாட்டுக் கால்நடைகளைக் காணக் கண்கள் இரண்டு போதா. திமிரும் கால்நடைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்த மூக்கணாங்கயிறு. ஆயினும் மிகப்பாதுகாப்பாக மூக்கணாங்கயிற்றைக் கையாளவில்லையென்றால் மாட்டின் மூக்கில் புண் ஏற்படலாம். ஏன் மூக்கே அறுந்துகூடப் போகலாம். ஆனால் பண்டம்பாடிகள் வெள்ளாமைக் காட்டினில்  முளைத்த அல்லது விளைந்த பயிரில் வாய்வைத்தபோது வேகமாக மூக்கணாங்கயிற்றை இழுத்து மாட்டுக்கு மூக்கறுந்துவிட்டது என்பது நாங்கள் கேள்விப்படாத நிகழ்வு. “நெனவு கெட்டவ நானு...ஒரு நிமிசம் ஏமாந்திட்டேன்.. ஒருசெறகுச் சோளப்பயிரத் தின்னுப்போட்டுது..எரும.” என்றுத் தம்மைத்தாமே நொந்துக்கொள்வார்களேயொழிய மாடுகளுக்குத் தண்டனைத் தரமாட்டார்கள். “வாயில்லாச்சீவன் அதுக்கு என்னத்தெரியிம்?!!” என்பார்கள்.
ஆகவே மூக்கணாங்கயிற்றை நேரடியாகக் கைக்கயிற்றில் இணைக்காமல், கழுத்துக்கயிற்றோடுச் சேர்த்துத்தான் இணைத்திருப்பார்கள். நாம் வேகமாக இழுத்தாலும் கழுத்துக்கயிற்றோடுப் பிணைத்து இருப்பதால், அவைகளின் மூக்குக்கு எந்தத் தீங்கும் நேராது. அண்ணாங்கால் போடும்போதும், நீளமாக இருக்கும் கைக்கயிற்றைக் கழுத்துக்கயிறோடுச் சுற்றிக் கொணர்ந்து முடிச்சொன்றை முடிந்துப் பின்னர் மாட்டின் வலதுகாலில் குளம்புக்குச் சற்றுமேலே இரண்டு உருவாஞ்சுற்றுகள் சுற்றி மீதமிருக்கும் கைக்கயிற்றின் நுனிப்பகுதியால் இடதுகாலையும் நடக்குமளவுக் கட்டித்தளைத்து மேய்ச்சலுக்கு விடுதல்தான் “தளையல்” என்பார்கள். அதாவது அவைகள் மேய்ந்து முடிக்கும்வரை மேல்நோக்கிப் பார்க்காமல், மேய்நிலத்தை மட்டும் பார்க்க அண்ணாங்காலும், சிறு எல்லைக்குள் மேயும்போது மெதுவாக நகர்ந்துபோகத் தளையலும் போடப்படுகின்றன. புற்கள் நிறைந்தவிடத்தில் கால்நடைகள் காதுமடல்களை அசைத்தபடி, கண்களில் பசுமைமின்ன, வெறுக்வெறுக் என்றுப் பச்சையை மேய்வதைப் பார்க்கப்பார்க்க ஆசையாக இருக்குமெனக்கு. பொழுதுவிழும் நேரத்தில் மாட்டுக்கு வயிறு நம்பியிருந்தால்தான் நமக்குத் தூக்கமே வரும். இன்னும் சொல்லப்போனால்  பண்டம் பாடிகளுக்கு வயிறு நெறஞ்சாத்தான் அன்னக்கி நாங்க உங்கற சோறு எங்க ஒடல்ல ஒட்டும்.


என் பால்யவயதுகளில் நான்கண்ட, பில்லாம்பூச்சி என்று உருண்டு விளையாடி மகிழ்ந்த, வெங்காயக்காடுக் களையெடுக்கப் பயன்படும் சிறுகொத்துக் கொண்டுக் கோரைக்கிழங்குகளை அகழ்ந்தெடுத்துத் தோல்நீக்கிப் உண்டுகளித்த வரப்புகளில், பில்லாங்கொரைகளில், பண்டம்பாடிகள் மேய்ந்துச் சலித்தப் புல்வகைகளில் பெரும்பாலானவைகளை இன்றுக் காணவில்லை. கொங்குவழக்கில் “புல்”லை “பில்” என்பார்கள். அருகம்புல், அரிசிப்பில், அப்பிச்சிமீசை, ஆனையருகு, ஆனைக்கோரை, இராகிக்கருதுச் சக்களத்திப்பில், ஊசிப்பில், கணுவுப்பில், கரையாம்பில், கொழுக்கட்டாம்பில், கோரை, சம்பு, சட்டிக்கீரைப்பில், சாமக்கோரைப்பில், சாரணை, சாணிப்பூடு, சிறுகோரை, செவ்வருகு, வரிக்கிராய், வெண்ணெய்திரட்டிப்பில், வெள்ளருகு, மத்தங்காப்பில், புளிச்சான், பசிறி, தொய்யச்செடி, பண்ணைச்செடி இன்னும் பிற என்றுக் கொங்குநாட்டு மேய்ச்சல் நிலங்களில் புற்களும், செடிகளும் நூற்றுக்கணக்கில் உண்டு. பொழுதன்னைக்கும் மேய்ந்துவிட்டு வந்து வயிறுநிறையத் தவிட்டுத்தாழியில் கண்வரைக்கும் முக்குளிபோட்டுத் தவிடும், தேங்காய், கடலைப்புண்ணாக்கு தின்னும் காட்சியைக் காணும்போதில் எங்குமில்லாத நிம்மதி நம் மனத்துக்கு வந்துசேரும்.


பெற்றோர் தாம்பெற்ற மக்களுக்கு உப்பு, மிளகாய் கொண்டு சுற்றிக் கண்ணேறுக் கழிப்பதைப் போலவேக் கால்நடைகளுக்கும் கண்ணேறுக் கழிக்கின்ற வழக்கமும் இங்கே உண்டு. எவரேனும் ஐயப்படும்படி நம் வீட்டிற்கு வந்துவிட்டுச் சென்றநாளில் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டால், வந்துச் சென்றவரின் காலடித்தாரை மண்ணை எடுத்துவந்து உப்பு, மிளகாயுடன் சேர்த்து கால்நடையைச் சுற்றித் தீயில் எறிவதும், மடியில் புண்ணானால் பார்வைக்கொப்பளம் என்றும், அதற்கு அப்பக்கோவை இலையை அரைத்துப் பூசிவிட்டபின், வீட்டிற்குமுன் உலக்கையைத் தென்வடலாகக் கிடத்தி நோய்வாய்ப்பட்ட கால்நடையைக் கிழமேலாக மும்முறைத் தாண்டவைப்பதும் மரபு. இந்த வழக்கங்களும், மரபுகளும், மாடு மேய்த்தலும் எல்லாம் நம் பெரியவர்கள் உள்ளவரை இன்னும் சிறிதுகாலம் தான் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். இப்போதே நான் சிறுவயதில் கண்ட புல்வகைகள் பெரும்பாலானவைகளைக் காணவியலவில்லை. வெள்ளாமைக்காடுகள் முழுமைக்கும் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், நச்சு உரங்கள் என்று எல்லாமும் நம் மண்ணைப் பசும்புல் கூடத் தலைகாட்ட முடியாதவாறு மலடாக்கிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு சிற்றூருக்கும்  ஒருவராவதுப் புற்றுநோயில் துன்புறுபவர் இருக்கிறார். பசுந்தீவனங்கள் கிடைக்காமல் வரத்தீவனங்களையும், பருத்தி ஆலைகளில் கழிவாகக் கொட்டப்படும் கழிவுப்பஞ்சுகள், பாலுற்பத்தியைத் தூண்டும் புரதங்களடங்கிய ஆலைத்தீவனத்துக்கு என்று ஆலாய்ப்பறக்கும் வகையில் வாயில்லாப்  பண்டம்பாடிகளைத் தீவன அடிமைகளாக்கிவிட்டோம். பொழுது உச்சிக்கு ஏறும்வரையில் கட்டாந்தரைகளில் கட்டிவைத்திருந்து, மூன்றுகுடம் தண்ணீரில் இரண்டுகிலோ ஆலைத்தீவனத்தைக் கலந்துக்கொடுத்துத்தான்  அன்றாடம் அவற்றின் உதிரத்தைப் பாலாகக்கறக்கிறோம். அதைப் பாலென்றுச் சொல்லி நம் பிள்ளைகட்குக் கொடுத்து உடம்பெல்லாம் நச்சு வளர்க்கிறோம்.       இனித் தீவன ஆலைக்காரர்களையும், ஜெர்ஸி விந்தணு வியாபாரிகளையும், பால் கறக்கும் கருவி உற்பத்தியாளர்களையும் நம்பித்தான் கால்நடைகளை வைத்திருக்கமுடியும். சிறிது சிறிதாய் நம் பசுமைக் கரையும். நாளடைவில் பாலெனும் வெண்மையில் அமிலம் நிறையும். பின்னர் மீண்டும் வெறுங்குருதியாகப் பசுமைப் போர்த்தியிருந்த மண்ணெலாம் செம்மையாய் ஓடும். அன்று நாமும் பீற்றிக்கொள்வோம்.. மாடென்ன? மனுசனென்ன? எல்லாம் ஒண்ணுதான வென்று.

முனைவர். செ. அன்புச்செல்வன்